தொடர் சரிவில் பங்குச் சந்தை
பங்குச் சந்தை, வாரத்தின் முதல் நாளான திங்களன்று சரிவைச் சந்தித்தது. ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கையை செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளது. இதனாலேயே கடந்த வாரம் முதலே பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வந்தது. இதே நிலை திங்களன்றும் தொடர்ந்ததால் 190 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 17,400 புள்ளிகளாகச் சரிந்தது.
தேசிய பங்குச்சந்தையில் 59 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 5,203 புள்ளிகளாகக் குறைந்தது. முக்கியமான நிறுவனங்கள் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
உலோக நிறுவனங்களும் சரிவடைந்தன. டிஎல்எப் நிறுவனப் பங்கு விலை மிக அதிகபட்சமாக 4.15 சதவீதம் சரிந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. பின்னர் நிலைமை சிறிதளவு சீரடையத் தொடங்கியது. பிற்பகலில் சில நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து பெருமளவு சரிவு தவிர்க்கப்பட்டது.
