போலந்து அதிபர் பலி – பைலட் தான் காரணம்
போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி விமான விபத்தில் பலியானதால், அந்நாட்டில் ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. விமான விபத்திற்கு பைலட் தவறே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும்,முக்கிய தகவல்களை உள்ளடக்கிய கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.போலந்து அதிபர் லெக் கெச்சின்சிகி(60), தனது மனைவி மரியா மற்றும் ராணுவ தளபதி,மத்திய வங்கி தலைவர்,போலந்து அரசின் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நேற்று முன்தினம் விமானத்தில் ரஷ்யா புறப்பட்டார்.
ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில், இந்த விமானம் தரை இறங்க முயற்சித்தது. அப்போது, விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்ட விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், ‘ஸ்மோலென்ஸ்க் விமான நிலையத்தில் கடும் பனி மூட்டம் உள்ளது; இங்கு விமானத்தை தரை இறக்குவது ஆபத்தை ஏற்படுத்தும். இதனால், மாஸ்கோ உள்ளிட்ட வேறு விமான நிலையங்களில் விமானத்தை தரை இறக்கவும்’ என, எச்சரித்தனர்.இந்த எச்சரிக்கையை விமான பைலட் பொருட்படுத்தவில்லை. கடும் பனி மூட்டத்துக்கு இடையே, விமானத்தை அங்கு தரையிறக்க முற்பட்டார். ஆனால், விமானம் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு பதிலாக,அருகில் உள்ள வனப்பகுதியில் இறங்கியது. அப்போது, மரக்கிளைகளில் பலமாக மோதி தீப்பிடித்து, பல துண்டுகளாக சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அதிபர் லெக் கெச்சின்சிகி உட்பட 132 பேரும் பலியாயினர்.

